.

Sunday, September 6, 2015

மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் பலன் கிடைக்குமா?



பலரும் காலையில் உடற்பயிற்சி செய்தால் மட்டும் தான் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு காலையில் பயிற்சி செய்வதை விட மாலையில் பயிற்சி செய்வது தான் அதிக பலனை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மாலையில் பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.


மாலையில் உடற்பயிற்சி செய்வதால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். ஆனால் உடற்பயிற்சிக்கும், தூக்கத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தூக்கம் தான் பாழாகும். காலையில் உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் கட்டாயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தளர்ந்த தசைகள் சற்று உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு இறுகும்.

மேலும் அப்படி தசைகளை ஒருநிலைக்கு கொண்டு வர நீண்ட நேரம் வார்ம் அப் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் மாலையில் ஏற்கனவே உடல் தயாராக இருப்பதால், நீண்ட நேரம் வார்ம் அப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மாலையில் உடற்பயிற்சி செய்வதால், மற்ற வேலைகளால் அவசரமாக உடற்பயிற்சியை முடிக்க வேண்டிய அவசியமில்லை.

பொறுமையாகவும், நிதானமாகவும் உடற்பயிற்சியை மேற்கொள்ள அதிக நேரத்தை ஒதுக்கலாம். அலுவலகத்தில் நாள் முழுவதும் வேலை செய்து, விட்டு வீடு திரும்பிய பின் உடற்பயிற்சி செய்வதால், வேலை செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம், மனசோர்வு, பறந்தோடிவிடும். இதனால் இரவில் நல்ல தூக்கத்தையும் பெற முடியும்.

காலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், ஆற்றலை அளிக்கும் ஏதேனும் உணவை கஷ்டப்பட்டு உட்கொள்ள வேண்டி வரும். ஆனால் மாலையில் என்றால் ஏதேனும் ஸ்நாக்ஸ் அல்லது புரோட்டீன் ஷேக்கை எடுத்துக் கொண்டு, உடற்பயிற்சியை நல்ல ஆற்றலுடன் தொடங்கலாம்.
Disqus Comments