.

Monday, September 7, 2015

பல் ஈறுகளில் இரத்தம் வருகிறதா?



வாய்ப் பகுதியில் உண்டாகக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி. 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யாகோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும்.


தற்காலத்தில் விஞ்ஞானம் மருத்துவம் மிகவும் முன்னேறியிருக்கும் நிலையிலும் கூட, ஈறுகளிலிருந்து குருதி வடிந்து வாய்ப்பகுதியைப் பாதிக்கின்றது.

ஈறுப் பகுதியில் நோய் உண்டாவதற்கான அறிகுறியே இரத்தம் வடிதலாகும். சரியாக சொல்லப் போனால் ஈறிலிருந்து குருதி வடிதல், பல்லெயிற்று வீக்கம் என்ற நோயிற்கான அறிகுறியாகவே கூடுதலாக தோன்றும். இதைச் சரியாக கவனிக்கா விட்டால் பின்பு இந்நோய் முற்றி, ஆபத்தான பற்குழி நோயை உண் டாக்கிவிடும். இவற்றிற்கும் சிகிச்சை செய்யாவிடில் பின்பு பற்கள் தானாகவே கழன்று விழத்தொடங்கும்.

கூடுதலானோருக்கு ஈறிலிருந்து குருதி வடிதல் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உருவாவதுண்டு. இது பொதுவாக இனிப்புகூடிய மேற்கத்தேய நாட்டு உணவுகளை கூடுதலாக உட் கொள்ளும் போது அவ் உணவிலுள்ள இனிப்பு, பற்களிலுள்ள பற்றீயா கிருமிகளின் விருத்திக்குக் காரணமாகி, இக்கிருமிகள் ஈறுப் பகுதியை பாதிக்கத் தொடங்கும்.

இந்நோய் உருவாகாமலிருக்க ஒரு நாளுக்கு இரு முறையாவது பல் துலக்குங்கள். அத்துடன் இனிப்புப் பண்டங்கள் உண்பதை குறைப்பதுடன், ஒழுங்கான இடைவெளியில், பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று உங்கள் பற்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நோய் உண்டாவதற்கான காரணங்கள் பற்களின் கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள மென்மையான தசைப்பகுதியில், பல்லெயிற்று வீக்கம் ஏற்பட்டு இதன் காரணமாக பற்களை தசையுடன் பிடித்து வைத்திருக்கும் வேர்கள் நலிவடைந்து போகும்.

இனிப்பு பண்டங்களையோ அல்லது பானங்களையோ அருந்தியதன் பின்பு பல் துலக்காமல் விடும்போது இந் நேரங்களில் பற்றீயாக் கிருமிகளின் விருத்தி அதிகரிக்கும். ஆகவே ஒழுங்கான முறையில் பல் துலக்குவதன் மூலம், உணவை உட்கொண்ட பின்பு நன்றாக வாயை கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கலாம்.

பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும் போது ஈறுப்பகுதி கூடுதலாக மென்மையடைவதால், அதன் மூலம் குருதி வடிதல் அதிகரிக்கும். இந்நிலையில் கூடுதலாக பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும். விற்றமின் இ குறைவு, குருதி உறையாக் கேடு, வெண்புற்று நோய் போன்றன ஏற்பட்டாலும் ஈறிலிருந்து குருதி உண்டாக வாய்ப் புண்டு.

நோயின் அறிகுறிகள்.

சில வேளைகளில் குருதி வடியும் போது குறைவான நோவு ஏற்படும். பற்களை துலக்கும் போதோ, வாயைக் கொப்புளிக்கும் போதோ, உமிழ் நீலோ இரத்தம் காணப்படும். மொறுமொறுவான உணவுப் பண்டங்களை உட்கொள்ளும் போது குருதி வடிதல் உண்டாகும்.

ஈறிலிருந்து தான் குருதி வடிகிறதென்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?

பற் சிகிச்சை நிபுணர் பற்களிற்கும் அதன் தசைக்கும் இடையில் நீண்ட கூரான சத்திரசிகிச்சை ஆயுதத்தை செலுத்தி பார்ப்பதன் மூலம் குருதி எங்கிருந்து வடிகிற தென்பதை கண்டு கொள்வார். இரத்தப் பசோதனை மூலம் குருதி உறையாக்கேடு நோய் உண்டாகியிருக்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம்.

இந் நோயிற்கான சிகிச்சை முறைகள் என்ன?

பற்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்றீயாக் கிருமிகள் உண்டா தற்கான மூல காரணத்தை கண்டுபிடித்து அகற்றுதல் வேண்டும்.

விற்றமின் குறைவால் உண்டாகியிருந்தால் அதற்கான விற்றமின் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.

சிற்றிரஸ்பானங்கள், மொறுமொறுவான உணவுகள், கார உணவுகள், மதுபானங்கள், சிகரெட்டு போன்றவை குருதி வடிதலை மிகைப்படுத்தும்.

செயற்கையான பற்கள், குருதி வடிதலை மிகைப்படுத்தும். ஆகவே இவற்றை உணவை உட்கொள்ளும் போது மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.

நீரில் தோய்ந்த பஞ்சையோ, அல்லது மெல்லிய துணியையோ குருதி வடியும் ஈறில் சிறிது நேரத்திற்கு வைப்பதன் மூலம் குருதி கசிவதை கட்டுப்படுத்தலாம்.

மென்மையான பற்தூரிகை கொண்டு பற்களை துலக்கலாம்.
உப்புத் தண்ணீர், அல்லது அல்ககோல் சேர்ந்த வாய் கொப்புளிக்கும் திரவம் கொண்டு வாயை கொப்புளிக்குமாறு உங்கள் பற்சிகிச்சை நிபுணர் அறிவுறை வழங்கக் கூடும்.

ஈறிலிருந்து குருதி வடிதலை தடுப்பதற்கு வீட்டில் கையாளக் கூடிய முறைகள்.

காலையும், மாலையும், உப்புக் கலந்த இளஞ்சுட்டு நீர் கொண்டு, வாயை கொப்பளிப்பதன் மூலம் சவ்விலுள்ள வீக்கத்தை குறைத்து சுற்றோட்டத்தை சீராக்கலாம்.
பற்களை ஒழுங்காக துலக்குவதன் மூலம், பற்களுக்கும் மென்சவ்விற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் உணவை பல்குத்தி கொண்டு துப்பரவு செய்தல் மூலம் வாய்ப்பகுதியை சுத்தமாக பேணலாம்.
Disqus Comments