.

Friday, August 1, 2014

கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிறவரா நீங்க?


ஒரு காலத்தில் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே கிடைத்து வந்த சூப், இன்று தெரு உணவாக மாறியிருக்கிறது. டீக்கடைகளுக்கு நிகராக, தெருவுக்கு இரண்டு சூப் கடைகளைப் பார்க்க முடிகிறது. காபி, டீயையும், குளிர்பானங்களையும்விட சூப் குடிப்பது ஆரோக்கியமானது என்கிற எண்ணம் படித்த, படிக்காத எல்லா மக்களிடமும் பரவியிருக்கிறது.

காய்கறி சூப், தக்காளி சூப், காளான் சூப், கீரை சூப் என விதம் விதமான பெயர்ப் பலகையுடன் வரவேற்கிற சூப் கடைகளில், ஆவி பறக்க கிடைக்கிற சூப் வகைகளுக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு. சூப் உடன் கூடவே கொறிக்கக் கொடுக்கிற கார்ன்ஃப்ளேக்ஸ் கூடுதலாக கவனம் ஈர்க்கும் விஷயம்.



சூப் ஆரோக்கியமான உணவு என்பதில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் என யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது எங்கே, எப்படி, எதைக் கொண்டு தயாராகிறது என்பதுதான் கேள்வியே. நட்சத்திர ஓட்டல்களில் விருந்துக்கு முன்னால் பரிமாறப்படுகிற சூப் வகைகள் பசியைத் தூண்டக் கூடியவை. அதை மட்டுமே நினைவில் கொண்டு, சூப் என்றால் பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றுக்கு உபாதை செய்யாதது என்கிற நினைப்பில் கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிற நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் ஒரு நிமிடம்...

‘‘சாலையோரக் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட் வாசல்களிலும் விற்கப்படுகிற சூப்களில் சுவைக்காகவும் கெட்டியாக்கவும் சேர்க்கப்படுகிற பல பொருட்களும் ஆரோக்கியக் கேட்டை வரவழைப்பவை. சூப் குடிப்பது ஆரோக்கியமானது என்பது மாறி, அனாவசிய நோய்களை நாமே தேடிச் செல்ல வைக்கிறது’’ என்கிறார் குடல் நோய் மருத்துவ நிபுணர் ராஜேந்திரன். அடுத்து அவர் சொல்கிற தகவல்கள் சூப் பிரியர்களை நிச்சயம் அதிர வைக்கும். ‘‘சூப் வகைகளை கெட்டியாக்கப் பயன்படுத்தப்படுகிற ஜவ்வரிசிக் கஞ்சி, சோள மாவு இந்த இரண்டுமே அளவு கூடும் போது, குடலை பாதிக்கலாம். சுவைக்காக சேர்க்கப்படுகிற மோனோசோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி) வயிற்று உபாதை, தலைவலி, வாய் எரிச்சல், அலர்ஜி போன்ற பல பிரச்னைகளை உருவாக்கலாம்.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் ஆபத்தானது அதில் சேர்க்கப்படுகிற கொழுப்பு பவுடர். விலங்குகளிடமிருந்து பெறப்படுகிற கொழுப்பானது பதப்படுத்தப்பட்டு, பவுடராக்கப்பட்டு, பலவித பேக்கரி தயாரிப்புகளுக்கும், சூப் தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த கொழுப்பு பவுடரானது சூப்புக்கு கெட்டித் தன்மையைக் கொடுப்பதுடன், சுவையையும் மேம்படுத்தும். சுவைக்கு அடிமையாகி, மீண்டும் மீண்டும் சூப் குடிக்கிறவர்களுக்கு, அந்தக் கொழுப்பானது கொஞ்ச நாட்களிலேயே தன் வேலையைக் காட்டத் தொடங்கும். கொழுப்பு கூடுவதால் உண்டாகிற பிரச்னைகளைப் பற்றி இங்கே புதிதாகப் பேசத் தேவையிருக்காது.

இந்த கொழுப்பு பவுடரும் குடலைத் தாக்கக் கூடியது. இத்தனை கேடுகளை உள்ளடக்கிய சூப்பை அடிக்கடி குடிப்பவர்களுக்கு ‘ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ எனப்படுகிற நெஞ்செரிச்சல், காஸ்ட்ரோ என்ட்ரைடிஸ் எனப்படுகிற சிறுகுடல் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். சூப் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிற தண்ணீர், காய்கறிகளின் தரம் என எல்லாமே கேள்விக்குரியவை என்பதால் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாராகிற சூப்பை குடிப்பவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அளவுக்குத் தீவிரமான குடல் பாதிப்புகூட உண்டாகலாம்’’ என எச்சரிக்கிறார் டாக்டர் ராஜேந்திரன்.

இன்ஸ்டன்ட் சூப்பில் எக்கச்சக்க உப்பு!

இன்ஸ்டன்ட் சூப் பவுடர் வகைகளும் விதிவிலக்கல்ல. சுவையூட்டவும், நிறம் சேர்க்கவும், கெட்டியாக்கவும் பயன்படுத்தப்படுகிற பலவித கெமிக்கல்களை தாண்டி, அவற்றில் சேர்க்கப்படுகிற அளவுக்கதிக உப்பே ஆபத்துக்கு அடிப்படையாகிறது என்கின்றன மருத்துவத் தகவல்கள். ஒருநாளைக்கு ஒருவருக்குத் தேவைப்படுகிற சராசரி உப்பின் அளவைவிட, இந்த இன்ஸ்டன்ட் சூப் பவுடர்களில் 5 மடங்கு அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. உடல் பருமன், ரத்த அழுத்தம், வயிற்றுப் புற்றுநோய், ஆஸ்டியோபொரோசிஸ், சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு என பலவித பயங்கரங்களுக்கு அஸ்திவாரம் அமைக்கும் அளவுக்கு ஆபத்தானது இந்த அதிகப்படியான உப்பு.

சூப் பற்றிய சூப்பர் தகவல்கள்!

உடல்நலமில்லாதவர்களுக்கும் உடல் இளைக்க நினைப்போருக்கும் உகந்த உணவு சூப் என்பது பரவலான அபிப்ராயம். ஆனால், சூப்பில் பல வகைகள் உள்ளன என்பது தெரியுமா?

‘‘தெளிவான சூப், கடைந்த சூப், முழு உணவு சூப், குளிர்ந்த சூப் என சூப்பில் பல வகைகள் உள்ளன.  சூப்பை பசியைத் தூண்டும் பானமாகவும் கொடுக்கலாம். உடல் இளைக்க நினைப்போருக்கான ஒருவேளை உணவாகவும் கொடுக்கலாம். உடல்நலமில்லாதவர் களுக்கான சத்து பானமாகவும் தயாரித்துக் கொடுக்கலாம்’’ என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.

‘‘தெளிவான சூப் என்பது குறைந்த கலோரியும், அதிக வைட்டமின், தாதுச் சத்துகளும் கொண்டது. வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், இந்த வகை சூப்புகள் பசியைத் தூண்டக் கூடியவை. கடைந்த சூப்புகளில் வேக வைத்து அரைத்த காய்கறிக் கலவையோடு, பால் சேர்த்த ஒயிட் சாஸ் சேர்க்கப்படும்.

இவை உடலுக்கு ஊட்டம் தருவதோடு, எளிதில் செரிமானமாகக் கூடியவை. உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு நோயிலிருந்து மீண்டு, தேறிக் கொண்டிருக்கிற வேளையில் அதிகமான ஊட்டச் சத்து தேவைப்படும்.

அவர்களுக்கு ஏற்றது இது. காய்கறிகளை வடிகட்டாமல் தயாரிக்கிற முழு உணவு சூப்பானது அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. குறைந்த கலோரியில் அதிக வைட்டமின், தாதுச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம் என எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது இந்த வகை சூப். உடல் எடை குறைய நினைப்போர் ஒருவேளை உணவுக்குப் பதிலாக இந்த வகை சூப்பை குடிக்கலாம்.

சூப் என்றாலே சூடாகக் குடித்துதான் நமக்கெல்லாம் பழக்கம். ஆனால், குளிர்ந்த சூப்புகளும் உண்டு. உஷ்ணம் அதிகமான பகுதிகளில் இது போன்ற கோல்ட் சூப் வகைகள் மிகப் பிரபலம்...’’ சூப் பற்றிய சூப்பர் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் மல்லிகா பத்ரிநாத்.

சிக்கன் சூப் ஃபார் வெஜிடேரியன் ஸோல்!

சைவ உணவுக்காரரான நீங்கள், ஸ்டார் ஓட்டல்களுக்கு போகும் போது, ஏதேனும் ஒரு வெஜிடேரியன் சூப் மட்டும் குடிக்கிற பழக்கமுள்ளவரா? அசைவ உணவு கிடைக்கிற பெரும்பாலான ஸ்டார் ஓட்டல்களில் எல்லா சூப் வகைகளிலும், அது சைவமே ஆனாலும், அவற்றில் அசைவ உணவு வேக வைத்த தண்ணீரே பிரதானமாக சேர்க்கப்படும். அது சிக்கன் அல்லது மட்டன் வேக வைத்த தண்ணீராக (ஸ்டாக்) இருக்கலாம். எச்சரிக்கை!
Disqus Comments