.

Friday, April 22, 2016

வாயு தொல்லையை போக்க எளிய வழிமுறைகள்


உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.


நல்ல ஆரோக்கியமான உடலுக்கு, இருநேரம் சிற்றுண்டியும் ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. அந்த இரு சிற்றுண்டியிலும் ஒரு வேளை (காலை அல்லது இரவு) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.
காலை வேளை உணவைப் பெரும்பாலோர் தவிர்ப்பதோ அல்லது அக்கறையின்றி அவசர உணவாகவோ எடுப்பதோ பெருகி வருகிறது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தை குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல், கைக்குத்தல் புழுங்கல் அரிசி கஞ்சி, சிறு குழந்தைகளாயிருப்பின் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி மிக நல்லது. இன்று பிரபலமாகி வரும் ’ஒட்ஸ் கஞ்சி’க்கு சற்றும் குறைவில்லாததும், நம் விவசாயியை வாழ வைப்பதுமான இந்த உணவு நமக்கு உகந்தது.

வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல்/அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளி துண்டுகள், இளம்பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு எடுக்கலாம்.
மதிய உணவில் நிறைய காய்கறிகள், கீரை கூட்டு/கடைசல்,-இவற்றுடன் அரிசி உணவு அளவாய் சாப்பிடுதலும், இரவில் காலை உணவு போல் எளிய சத்தான உணவு எடுத்தலும் அவசியம்.

வயிற்று உப்பிசம், அசீரணம், சத்தமாய் பயமுறுத்தும் ஏப்பம், நெஞ்செரிச்சல், எப்போதெனினும் எடுக்கும் விருந்திற்கு கூட ஏற்படும் உடனடியாக வரும் வாய்த்தொல்லை என ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாது, உணவில் கவனம் செலுத்தி சரி செய்வது அவசியம். உணவில் என்ன செய்யலாம்?

அதிக காரத்தை தவிர்த்துவிடுங்கள். மிளகாய் வற்றல் பயன்படுத்தவேண்டிய இடங்களில் மிளகு பயன்படுத்திப்பழகுங்கள். எண்ணெயில் பொரித்த உணவை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. சரியான வேளையில் உணவை எடுக்கத் தவறாதீர். மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை டி.வி.யில் அத்தனை பேரும் அழுது முடிந்தபின்னரோ அல்லது ’டி20’-மேட்ச் முடியும் போதும் தான் சாப்பிட முடியும் என அடம் பிடிக்க வேண்டாம். வலி நிவாரணி மருந்துகளை அவசியமின்றி எடுக்க வேண்டாம். புகை, மது இரண்டும் கேன்சரை வயிற்றுப் புண் வழியாக அழைத்துவரும் கொடூரவிஷயங்கள். மனதை எப்போதும் இலகுவாக வைத்திருங்கள். எப்போதும் டென்ஷனுடன் இருப்பவருக்கு கண்டிப்பாக சீரண்க் கோளாறு வந்துவிடும்.இன்னும் மன அழுத்தத்தில் (டிப்ரஷன்) இருப்பவர்களுக்கு அசீரணமும் வாய்த் தொல்லையும் கூடுதல் தொல்லை தரக் கூடியன.

அட! வந்துவிட்டது.? என்ன செய்வது? காலை உணவில் இட்லிக்குப் பிரண்டைத் துவையல் அரைத்து சாப்பிடுங்கள். துவரம் பருப்பு சாம்பாருக்குப் பதிலாக, சிறுபாசிப்பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடவும். வெள்ளை கொண்டைக்கடலைக்கு பதில் சிறுசிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்துங்கள் (அதுவும் கூட குறைந்த அளவில்-மிளகு சீரகம் சேர்த்து). 11 மணிக்கு நீர் மோர் 2 குவளை அருந்துங்கள். மதிய உணவில் காரமில்லாத, பாசிப்பயர்று சேர்த்த, கீரைக் குழம்பு, தேங்காய்ப்பால் குழம்பு(சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் 2 குவளை சீரகத்தண்ணீர் அருந்தவும். இரவில் கண்டிப்பாக வாழைப்பழம், உடன் எளிய ஆவியில் வெந்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடப் பழகுங்கள். காய்கறிகளில் கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளை இவற்றை தவிர்க்கவும். அதிகமான அளவில் மாம்பழமும், பலாப்பழமும் கூட வாயு உண்டாக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சமபங்கு, இந்துப்பு பாதிபங்கு எடுத்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்பு பொடி போல் போட்டு சாப்பிட்டால் அசீரணம் வராது. சாப்பிட்டதும் வயிறு காற்றடைத்த டயர் மாதிரி வீங்கி கொள்வோருக்கு இந்த அன்னப்பொடியை 1 ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் சாப்பிட வேண்டும். உடனடியாக வாயு விலகி வயிற்றுப்பிசம் விலகும்.
சித்த மருத்துவரிடம் கிடைக்கும் சீரண சஞ்சீவி, சீரக வில்வாதி உள்ளிட்ட மருந்துகள் அசீரணத்தை அகற்ற பெரிதும் உதவிடும். குடற்புண்கள் அதிகமிருப்பதாக எண்டோஸ்கோப் சொன்னால், பிரண்டையில் இருந்தும், உப்பில் இருந்தும் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் பூரண குணமடைய உதவிடும்.

வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்

நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.
உணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன.
அவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.

ஏன் சரிவர செரிமானம் ஆவதில்லை என்றால், நம்முடைய சாப்பிடும் பழக்கம் சரிவர இருப்பதில்லை. அதாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நம் வயதிற்கும் நாம் செய்யும் வேலையின் அளவிற்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிடத் தவறுகிறோம். காலை உணவை தவிர்ப்பது, பசி நேரத்தில் காபி, தேநீர் முதலிய பானங்களை குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடப்பது அல்லது கிடைத்ததையெல்லாம் கிடைத்த போதெல்லாம் தின்பது என்று நம் வயிற்றை நாமே பாடாய் படுத்துகிறோம். ‘உனக்காக உழைக்கும் என்னை நீ சரியாக கவனிக்கவில்லை’ என்ற நம் வயிற்றின் கூக்குரல் தான் இந்த வாயுத் தொல்லை.

இன்னொரு காரணம்: சாப்பிடும்போதோ, நீர் குடிக்கும்போதோ அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது. அவசரமாக உணவை விழுங்குவது, சூயிங்கம், பான், புகையிலை மெல்லும்போது நிறைய காற்று நம் வயிற்றினுள் சென்றுவிடுகிறது. அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர் பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. (நாம் தினமும் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறோம். அந்தக் கரியமில வாயுவை குளிர் பானத்தில் செலுத்தி பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். அவர்கள் வியாபாரிகள் – நாம் அதை வாங்கி குடிக்கிறோமே! என்ன கொடுமை இது சரவணன் என்று கேட்க தோன்றுகிறதா?)
இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாயுத் தொல்லை ஏற்படும். காசு கொடுத்து நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்ளுகிறோம்.

மலச்சிக்கல்:

உணவு மிக நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதாலும், கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப் படாததும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணமாகலாம்.

அல்சர் எனப்படும் குடல் புண்:

இதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.

வேறு காரணங்கள்:

உணவுக் குழாய், குடல், சிறுகுடலின் முற்பகுதியில் ஏற்படும் கோளாறுகள்.
வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சுரப்பது.
குடலில் இருக்கும் திசுக்கள் மெலிவடைவது.
பித்தப்பை, கணையம் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்.
வாயுத் தொல்லையை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று தின்னுங்கள். இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.

புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, வேலை டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.

அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.

ஒரு எச்சரிக்கை:

சிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.

வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

வாயு தொல்லை நீங்க – வெள்ளைப்பூண்டு பசும்பாலில்
வேகவைத்து சாப்பிட்டு வர விலகும்.

வாயு நீங்கி நல்ல பசி எடுக்க – விளாம்பழத்தின்
கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.

சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

சிறிதளவு காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

பழ உணவு மற்றும் இயற்கை ஆகாரங்கள் சித்தம், ஆயுர்வேதம் முதலிய பாரம்பரிய மருத்துவ பயிற்சியில் வாயுத் தொல்லயை குறைப்பதாக உள்ளன.அதற்கான நவீன அறிவியல் விளக்கம் முழுமையாக தெரியவில்லை.”மண் பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்” எனும் சித்த மருத்துவ தேரையர் நோயணுகா விதி பாடலின் கூற்றுப்படி பார்த்தால்,கருணை கிழங்கு தவிர பிற கிழங்குகள் புசிக்க கூடாது என்பதும்,கிழங்குகளில் உள்ள அதிகப்படியான அமைலோபெக்டின் மற்றும் குறைவான நார்பொருள் தான் அந்த அனுபவ பாடல் கூற்றுக்கு காரணம் எனவும் புரிகிறது.
Disqus Comments