.

Wednesday, March 9, 2016

எண்டோஸ்கோப்பி பரிசோதனை பற்றி அறிந்துகொள்ளுங்கள்



மருத்துவத்துறையில் எண்டோஸ்கோப்பியின் வரவு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜீரண நலத் துறையில் அதன் பங்கு அளவிட முடியாதது. கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் இன்று நிஜமாக்கி வருகிறது எண்டோஸ்கோப்பி, உடலுக்குள்ளே உள்ள ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்தி, மனித இனத்துக்குப் பெரும் உதவி செய்து வருகிறது.

தொடர் வயிற்றுவலி என்றால் கூட அறுவை சிகிச்சை செய்தே அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இன்று, எள் அளவு பிரச்சனையைக் கூட எண்டோஸ்கோப்பி காட்டிக் கொடுத்து விடுகிறது.

முன்பு, குடல்புண், போன்ற சாதாரண நோய்களுக்கு அரை அடி நீளத்துக்கு வயிற்றைக் கிழித்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் பெரிய காயம் ஆற அதிக நாள்கள் ஆனது.பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டிய ஆபத்து இருந்தது.நீண்ட நாள்களுக்குக் கட்டாய ஓய்வு, காயத்தில் இருந்து, சீழ் வடிதல், குடலிறக்கம் ஆகிய துன்பங்களை நோயாளிகள் சந்தித்தனர். இவையனைத்தும் தற்போது பழங்கதைகள் ஆகிவிட்டன.

ஜீரண மண்டல நோய்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவும் எண்டோஸ்கோப்பி கருவியின் பயன்பாடு குறித்து விரிவான அலசல் :

எண்டோஸ்கோப்பி என்றால் என்ன?

எண்டோ என்றால் உள்ளே, ஸ்கோப்பி என்றால் நோக்குதல் எனவே இது இரைப்பை குடல் உள்நோக்கி என்று தமிழில் அழைக்கப்படுகிறது. ஒரு மீட்டர் நீளத்தில் குடலின் நெளிவுகளுக்கு ஏற்ப வளைந்து, நெளிந்து குறுகிச்சென்று குடலின் பாகங்களைப் பன்மடங்கு மிகைப்படுத்திக் காண்பிக்கும் ஒரு நூதனக் கருவி. இக்கருவியின் நுனியில் ஒளி வருவதற்கான ஏற்பாடும், சுருங்கி இருக்கும் குடலை விரிவடையச் செய்ய காற்றுச் செலுத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. குடல் பகுதியில் புற்றுநோய் எனச் சந்தேகப்படும் இடங்களில் சதைப் பரிசோதனை செய்வதற்கான அமைப்பும் உள்ள நுண்ணிய கருவி இது. இக்கருவியை வாய்மூலமாகவும், ஆசன வாய் மூலமாகவும் செலுத்தி உள் பாகங்களைக் கண்டறிய முடியும்.

பயன்படுத்தும் உறுப்புகளைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களில் எண்டோஸ்கோப்பி அழைக்கப்படுகிறது. பெருங்குடலைப் பரிசோதிக்கும் கருவியை, கொலோனோஸ்கோப்பி (Colonoscopy) என்கிறோம். சிறுகுடலைப் பரிசோதிக்கும் எண்ட்ராஸ்கோப் (Enteroscope) என்றும் உணவுக்குழாய் இரைப்பையைப் பரிசோதிக்கும் எண்டோஸ்கோப்பி (Esophago Gastro Duodenoscopy) என்று அழைக்கப்படுகிறது. எண்டோஸ்கோப்பி கருவி மூலம் இரைப்பையின் உள்பகுதியை 5 நிமிடங்களில் அலசி ஆராய்ந்து விட முடியும்.

எண்டோஸ்கோப்பி மூலம் என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் :

உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், உள் சவ்வு (விuநீஷீsணீ) ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கண்டுபிடிக்க முடியும்.

குறிப்பாக, உணவுக் குழாய் புற்றுநோய், உணவுக் குழாய் அமில அரிப்பு, இரைப்பை மேலேற்றம், இரைப்பை புண், இரைப்பை புற்றுநோய்,  குடல்புண், ரத்த வாந்திக்கான காரணம், குடல் தசை வளர்ச்சி, பெருங்குடல் அழற்சி, மூல நோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி பரிசோதனை யாருக்குத் தேவை?

தீராத வயிற்று வலி, உணவு விழுங்குவதில் கஷ்டம், நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம், பசியின்மை, தீராத வாந்தி, தீராத வயிற்றுப்போக்கு, எடை குறைதல், இது தவிர பாரம்பரியத்தில் யாருக்காவது வயிற்றுப்புற்றுநோய் இருந்தால் அவர்களது வாரிசுகள், ரத்த வாந்தி, நீண்டகாலமாக மது, சிகரெட், புகையிலை பயன்படுத்துபவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், மலத்தில் ரத்தம் தென்படுபவர்கள் போன்றவர்களுக்கு எண்டோஸ் கோப்பி பரிசோதனை அவசியம்.

சிறுகுடலைப் பரிசோதிப்பதற்கான வீடியோ எண்ட்ரோஸ்கோப்பி (Video enteroscopy) என்ற கருவி உள்ளது. இக்கருவி மூலம் சிறுகுடலின் பாகங்களை நேரடியாக ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி மூலம் செய்யும் சிகிச்சை முறைகள் யாவை?

கல்லீரல் சுருக்க வியாதி (Cirrhosis), குடல் புண் (Duodenal Ulcer) ஆகியவற்றால் ஏற்படும் ரத்த வாந்தி, ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த எண்டோஸ்கோபபி உதவியுடன் பேண்டிங், ஸ்கிலிரோதெரப்பி, குளு (பசை) போன்ற சிகிச்சைகளைச் செய்ய முடியும்.

உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எண்டோஸ்கோப்பி மூலம் செயற்கை உணவுக்குழாய் (Metallic Stent) பொருத்த முடியும்.

உணவுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை, பலூன் மூலம் விரிவடையச் செய்து (Balloon Dilatation) சிகிச்சை அளிக்க முடியும்.
பித்தக்குழாய் கல் (Bile Duct Stone) மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அடைப்பு மஞ்சள் காமாலைக்கு எண்டோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். அதாவது ERCP மூலம் பித்தக் குழாயில் கற்களை நீக்க முடியும். பித்தக்குழாய் புற்றுநோய் சுருக்கத்துக்கு, செயற்கை உலோகக் குழாய் பொருத்தலாம்.

தவறுதலாக, நாணயம், ஹேர்பின், குண்டுஊசி, மீன்முள், எலும்புத்துண்டு, கோலிக்குண்டு, கம்மல் போன்றவற்றை விழுங்கி விடும் நிலையில், அவற்றை அறுவை சிகிச்சையின்றி எளிதாக எண்டோஸ்கோப்பி மூலம் எடுக்க முடியும்.

கணையக் கற்கள் அகற்றுதல், கணையத்தைச் சுற்றி நீர் கோர்த்திருந்தால் அதை வடிப்பது போன்றவற்றுக்கு எண்டோஸ்கோப்பி உதவும்.

எண்டோஸ்கோப்பி முறை சிகிச்சை பெறுவதற்கு செலவு அதிகமாகுமா?

பழைய முறையில் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் மருத்துவமனையில் 10, 15 நாட்கள் வரை தங்க வேண்டியிருக்கும். மருத்துவமனைச் செலவு ஒரு பக்கம், அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்குவதால் பொன்னான மனித நாட்கள் விரயமாவது மற்றொரு பக்கம், நோயாளியின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதோடு அவருக்கு உதவிக்கு வரும் உறவினர்களின் வேலைகளும் பாதிக்கப்படும். எண்டோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கினால் போதும். இதனால் மொத்தச் செலவு எனக் கணக்கிட்டால் எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு தான்.

எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளிப்பதற்கு உரிய பயிற்சி தேவை. உரிய பயிற்சியும் நிபுணத்துவமும் இருந்தால் தான் எண்டோஸ் கோப்பி மூலம் சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.

எண்டோஸ்கோப்பி சிகிச்சையால் பலன் என்ன?

முன்பெல்லாம் அறுவைசிகிச்சை முறையில் வயிற்றைத் திறந்து பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 7 முதல் 10 நாள்கள் வரை மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது. மயக்க மருந்து கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது கடினம். நவீன சிகிச்சை முறையில் குறிப்பாக எண்டோஸ்கோப்பி முறையில் பல நன்மைகள் உள்ளன. வயிற்றைக் கிழிக்காமல் வாய் வழியாகவே ஆசன வாய் வழியாகவோ கருவிகளைச் செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

தையல் இல்லை ரத்த சேதம் மிகக்குறைவு மயக்க மருந்து கொடுக்கத்   தேவையில்லை.

ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கினால் போதும்.

எண்டோஸ்கோப்பி ஜீரண நலத்துறையின் புரட்சி என்பது வெறும் வார்த்தை அலங்காரத்துக்காகச் சொல்லப்பட்டது அல்ல. எண்டோஸ்கோப்பியின் வருகைக்குப் பின் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எனவே எண்டோஸ்கோப்பி ஒரு நாட்டின் சமூக, சுகாதார மேம்பாட்டுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

Disqus Comments