.

Monday, January 18, 2016

நா‌ட்டு‌ச் ச‌ர்‌க்கரை, வெள்ளைச் சர்க்கரை - எது நல்லது !!



கால மாற்றத்தின் காரணமாகவும், நாகரீகத்தின் வளர்ச்சியினாலும், மனதை மாற்றும் விளம்பரங்களினாலும் கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என நினைத்து
வெள்ளையாக, பாலீஸ் செய்யப்பட்டு பளபளக்கும் உணவுப் பொருட்களைத் தேடி நாம் உண்ணுகிறோம்.
இதன் விளைவு, இன்றைய இளம் தலைமுறையினர் பலர், நாம் கேள்வி படாத பல்வேறு நோய்களின் படையெடுப்பில் சிக்கி தினம் தோறும், உணவோடு, பல மாத்திரை மருந்துகளையும் சேர்த்து தின்பதே ஆகும்.

அப்படி நாம் தேடி உண்ணும் உணவு பொருட்களில் சர்க்கரைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. பெரும்பாலான இல்லங்களின் உணவுகளில் வெள்ளைச் சர்க்கரை நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.

நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.

இந்த வெள்ளைச் சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திக்கொண்டிருந்தோம். கரும்புச் சர்க்கரை (நா‌ட்டு‌ச் ச‌ர்‌க்கரை), வெல்லம், பனை வெல்லம் போன்ற இயற்கைத் தன்மை நிறைந்த எந்த விதத்திலும் கெடாத இனிப்பை நாம் பயன்படுத்தி வந்தோம்.

கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும். இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது. மேலும் பல கரும்புச் சாறு மற்றம் கரும்புச் சர்க்கரையின் மகத்துவத்தை பற்றி இப்போது பார்ப்போமா.

மேற்கிந்தியத் தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கறும்புச் சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிறக் கரும்புச் சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.

கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்.

அதுவுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம்.

ஆக, ஆரோக்கியமற்ற வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து, நாட்டுச் சர்க்கரைகளை உணவில் சேர்த்து, நலம்மோடு வாழுங்கள்.  இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்...
Disqus Comments