.

Tuesday, March 3, 2015

ஒதுக்க வேண்டியதா கத்தரிக்காய்?



ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுவதில், காய்கறிகளும், பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கத்திரிக்காய் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில், நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும், உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும்.

இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியியை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. இதனை பிஞ்சாக சாப்பிடுவது பலனை தரும். முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால், உடம்பில் அரிப்பு ஏற்படும்.

தக்காளிக்கு இணையான இக்காய், தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன உள்ளன. ஆனால் வைட்டமின் ஏயும், வைட்டமின் சியும் குறைவாகவே காணப்படுகின்றன. இவற்றை ஈடுசெய்யும் வகையில், வைட்டமின் பி தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும், மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து, சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் பி பயன்படுகிறது.

இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால், அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் போது, மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும், கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு, உடலுக்கு வளத்தையும், வலிமையையும் தவறாமல் தரும்.


அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.
Disqus Comments