.

Wednesday, January 28, 2015

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

தொண்டை, மூக்கடைப்புக்கு நல்லது

கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும்.

நச்சுக்கள் அகலும்

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

பருக்கள் நீங்கும்

டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும்; முகமும் பொலிவடையும்.

முடி வளர்ச்சிக்கு சிறந்தது

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

இரத்த ஓட்டம் சீராகும்

நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.

குடல் இயக்கம் அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.

எடை குறையும்

இன்றைய காலக்கட்டத்தில் அதிக உடல் எடை என்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

மாதவிடாய் பிரச்சனை குறையும்

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.

மெதுவாகவே வயதாகும்

இந்தக் காலத்தில் சிலருக்கு வேகமாகவே வயதாகி விடும். உடலிலும் சருமத்திலும் தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருள்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்.

Disqus Comments