.

Thursday, January 1, 2015

சர்க்கரை நோயும்! களைப்பும்!

சர்க்கரை நோயும்! களைப்பும்!


சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது நோயின் அறிகுறிகள்! பல நேரங்களில் நாம் மாத்திரையோ, ஊசியோ சரியாக எடுத்துக்கொள்ளுவோம், சர்க்கரையின் அளவும் இரத்தம், நீர் ஆகியவற்றில் சரியாக இருக்கும்.
ஆனால் இவ்வளவு உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளைச் சரியாகச் சாப்பிட்டும் சிலருக்கு, உடல் அசதி, அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் இருத்தல் ஆகியவை இருக்கும்.
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் உடல் நலமாக இருக்கும் என்று நினைத்தால் அது சரியல்ல. உடலில் தோன்றும் அறிவுறைக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் அன்றாட வேளைகளைச் செய்வதற்கு சக்தி அவசியம். சர்க்கரையைக் குறைப்பதற்காக காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து ஒன்று அல்லது இரண்டு இட்லியை உண்கிறார் என்றால் சர்க்கரை குறையும், ஆனால் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான சக்தி இருக்காது. அவரால் அலுவலக வேலைகளைச் சரிவரச் செய்ய முடியாது.

சர்க்கரை அதிகமாக இருந்தாலும் தேவையான அளவு உணவுகளை உண்ண வேண்டும். எப்படி சத்துக் குறைவு இருப்பதைக் கண்டு பிடிப்பது?
உங்களால்,

o மாடிப்படி ஏறி இறங்க முடிகிறதா? (மூட்டுவலி உள்ளவர்களுக்கு சாதாரணமாகப் படிகளில் ஏறமுடியாது. அது வேறு....)
o தரையில் அமர்ந்திருந்து இலகுவாக எழுந்துகொள்ள முடிகிறதா?
o அன்றாட வேலைகளை அலுப்பில்லாமல் செய்ய முடிகிறதா?
o குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க முடிகிறதா?
o கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வரமுடிகிறதா?
மேற்சொன்னவற்றைச் செய்ய முடிந்தால் உங்கள் உடல் தகுதியுடன் உள்ளது என்று அர்த்தம்.
உதாரணமாக நடுத்தர வயதுடைய ஒருவருக்கு உடல் எடை75 கிலோ என்று வைத்துக்கொள்வோம். அவர் மருத்துவரை அணுகி சர்க்கரையைக் குறைக்க மருந்து,மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். சர்க்கரை நோய் குறையும் என்பதற்காக இவர் தினமும் நடைப்பயிற்சி செய்ய முயலுகிறார். ஆனால் அவரால் சாதாரணமாகக்கூட நடக்க முடியவில்லை, மூச்சுவாங்குகிறது( நிறையப்பேருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது..) என்கிறார்.
என்ன செய்வது?
இது எதனால் இப்படி? என்றால் காரணம் அவர் உடல் தகுதி குறைவாக உள்ளது என்று அர்த்தம்!! உடல் தகுதி குறைவாக உள்ளவர்களால் நடைப் பயிற்சியில் ஈடுபட முடியாது என்பதுதான் உண்மை!
சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவைத் தவிர்க்கக் கூடாது. கால சிற்றுண்டி, மதியம் சரியான நேரத்தில் அளவான மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை அறிவுரையின்படி தவறாமல் உண்ணவேண்டும்.
நடக்க முடியாமல் உடல் தகுதியில்லாமல் இருப்பவர்கள் அன்றாடம் எவ்வளவு உணவு உண்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளைக்குத்தேவையான ஏறக்குறைய 1500 கலோரியைவிடக் குறைவாக உண்பார்கள். நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சில நேரம் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிடுவோரும் உண்டு.
இப்படியுள்ளோருக்கு களைப்பு, உடல் சோர்வு,நடக்க முடியாமை ஆகியவை இருக்கும்.
இவர்களுடைய உணவில்{உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும்} 1500 கலோரி இருக்குமாறு உணவை அதிகரிக்க வேண்டும். சரியான ஓய்வு மற்றும் தேவையான அளவு உறக்கம் ஆகியவை முக்கியம். இவற்றுடன் அறைக்குள் கை,கால்களை மடக்கி நீட்டி இலகுவான பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். பிறகு வராந்தாவில் மெதுவான நடைப்பயிற்சி என்று முறைப்படி, படிப்படியாகச் செய்தால் வியக்கத்தக்க முறையில் உடல் நலம் சீரடைந்து வெகுவிரைவில் களைப்பில்லாமல் நடைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.
ஆகையினால் உங்களுக்கு நடக்க இயலாம, அன்றாட வேளைகளைச் செய்ய முடியாத களைப்பு ஆகியவை இருந்தால் சரிவிகித உணவு உண்டு உடல் தகுதியை அதிகரித்துக் கொள்வதே அவசியம்!!!
Disqus Comments