.

Saturday, September 6, 2014

நரைமுடிக்கு 'குட்-பை' சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!

நரைமுடி

நரைமுடி வருவதால் மக்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால், மிகவும் அதிகமாகக் கவலைப்பட்டால் நம் தலையில் நரைமுடி தோன்றும் என்பதும் உண்மை தான். ஆணோ, பெண்ணோ... இளம் வயதில் நரை வந்துவிட்டால், அவர்கள் ரொம்பவே வருத்தப்படுவார்கள். நரைமுடி அவர்களுக்கு வயதான தோற்றத்தைக் கொடுப்பதால், அவர்கள் மிகவும் நொந்து போயிருப்பார்கள்.

நரையை மறைப்பதற்கு மக்கள் டை அடிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பவுடர் மற்றும் திரவ நிலைகளில் நிறைய கம்பெனிகள் டை தயாரித்து வருகின்றன. அது மட்டுமல்ல, தற்போது பலப்பல வண்ணங்களிலும் நமக்கு இந்த சாயம் கிடைக்கிறது. ஆனாலும் அத்தகைய சாயங்களில் அம்மோனியா உள்ளிட்ட பல ரசாயனங்கள் கலந்திருப்பதால், முடி மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. முடிகள் உதிரவும், சருமங்களில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு சரியான மாற்று வழி, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சாயங்களை நாடுவதுதான். முடிந்தால், அவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். நரை முடிகளுக்கான சில இயற்கை தீர்வுகள் குறித்து பார்க்கலாம். ஏற்கனவே இவை நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் முயற்சித்திருக்கவே மாட்டோம். உடனே முயற்சி செய்து பாருங்கள்; பலன் நிச்சயம்!

தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை

தேங்காய் எண்ணெயுடன் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதைக் குளிரச் செய்து, முடிகளில் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சுமார் அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் மிதமான சுடுநீரில் ஷாம்பு கொண்டு கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். நரை முடியை மறைக்கும் திறன் கறிவேப்பிலையில் உள்ளது.

நெல்லிக்காய்

நெல்லிக்காயிலும் நரைமுடியை மறைக்கும் பண்பு காணப்படுகிறது. நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் நன்றாகக் காய வைக்கவும். பின், சுத்தமான தேங்காய் எண்ணெயில் அதைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின்னர் அது குளிர்ந்ததும் தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். தினமும் காலையில் நெல்லிக்காய் ஊற வைத்த நீரில் தலைமுடியைக் கழுவி வருவதும் நல்லது.

மோர், கறிவேப்பிலை

கறிவேப்பிலை கலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரை ஓடிப் போகும்.

நல்லெண்ணெய் மற்றும் கேரட் விதை எண்ணெய்

நரை வராமல் தடுப்பதற்கு, சிறிது கேரட் விதை எண்ணெயுடன் 4 ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து தலையில் மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய்

இந்த மூன்றும் கலந்த கலவையைத் தயாரித்து 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அந்தக் கலவையை தலைமுடியில் நன்றாக மசாஜ் செய்து, அரை மணிநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர், ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் நரைமுடிக்கு 'குட்-பை' சொல்லிவிடலாம்.

Disqus Comments