.

Thursday, August 28, 2014

சாப்பிட்டவுடன் டாய்லெட் செல்வது நல்லதா?

 டாய்லெட்

பரபரப்பான வேகத்தில் மக்கள் சுழலும் இந்த காலகட்டத்தில், பலருக்கும் உள்ள வினோத பழக்கம் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க செல்வது. இதனால் வெளியூர் செல்லும்போது பலரும் தர்மசங்கடமும், அவஸ்தையும் அடைந்து வருகின்றனர். இது பழக்கதோஷம் என நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் ஆயுர்வேதத்தில் இதனை நோயாக குறிப்பிடுகின்றனர்.

எதனால் ஏற்படுகிறது

குழந்தைகள் என்றால் ஓகே. சரி செய்து விடலாம். ஆனால் நடுத்தர வயதினருக்கு சிரமம் என்றும், வயோதிகர்களுக்கு உயிருக்கே ஆபத்து என்கின்றனர். ஆயுர்வேதத்தில் இதனை கிரகணி என்ற நோயாக குறிப்பிடுகின்றனர். அதாவது வயிற்றிலிருந்து குடல் பகுதிக்கு செல்லும் வளைவுப் பகுதியான டியோடினத்தில் ஏற்படும் பாதிப்பே கிரகணி நோயாகும்.

காரணம் என்ன?

வயிற்று போக்கு ஏற்பட்டு ஜீரணசக்தி சரி ஆவதற்கு முன்பாக தேவைக்கு அதிகமாக, தேவையற்ற உணவுகளை உண்பதால் தோஷங்கள் ஏற்பட்டு வயிற்று பாகமாகிய டியோடினம் பாதிக்கப்படுவதால் இந்நோய் உண்டாகிறது.

ஆரம்ப அறிகுறிகள்

அதிக தாகம், சோர்வு, பலம் குறைந்தது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், ஜீரணம் தாமதம், உடலில் பாரம் ஏற்றியது போன்று உணர்தல்.

அறிகுறிகள்

சாப்பிட்ட உடன் மலம் கழித்தல், ரத்தசோகை, வயிற்றில் பெருமல் சத்தம், வயிற்றுப்புண், குடலில் எரிச்சல் உணர்வு, காய்ச்சல் உணர்வு, நாடித்துடிப்பு வேகமாக காணப்படுவது, முதுகுவலி, பல் ஈறுகளில் பழுப்பு.

6 வகை

ஆயுர்வேதம் இதனை 6 வகையாக பிரிக்கிறது. வாதம், பித்தம், கபம், சன்னிபாகம் (வாதம் பித்தம் கபம் 3ம் கலந்தது), சங்கரக கிரகணி, கதிஅந்தர கிரகணி என 6 வகைப்படும்.

சிகிச்சை முறை

அக்னி எனப்படும் ஜீரணசக்தியை அதிகப்படுத்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். சித்திரகாதி குளிகை, துத்தவடி, ஜாதிபத்திரி சூரணம், கங்காதர சூரணம், நிர்பதி வல்லப ரசம், பியூசவல்லி ரசம், ரசம் பற்படி, சென்ன பற்படி, பஞ்சாமிர்த பற்படி, சாரியங்கிய கிருதம், சாருங்கியாதடி, கிரகணி கபாரசம் போன்றவை தன்மைக்கேற்ப வழங்கப்படும்.

வரும்முன் காக்க

ஜீரண சக்தி பிரச்னை ஏற்படும்போது அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லாவிடில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் வெளியேறுவதால் ரத்தசோகை ஏற்படலாம். பலக்குறைவு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் இதரநோய்கள் தாக்க வாய்ப்புகள் ஏற்படும்.
Disqus Comments