.

Wednesday, April 20, 2016

இரைப்பை குடல் அழற்சிக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!!!




இரைப்பை காய்ச்சல் என்று அழைக்கப்படும் இரைப்பை குடல் அழற்சி, வயிறு மற்றும் சிறு குடல் ஆகிய இரண்டும் வைரஸ் அல்லது பாக்டீரியாக்களின் தாக்குதல்களால் காயமடைந்து அதன் பாதைகளானது வீக்கமடைந்திருக்கும் நிலை ஆகும். இந்த இரைப்பை குடல் அழற்சியானது ஒரு தொற்றும் நோய். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உண்ணும் உணவுகள் மற்றும் தண்ணீர் வழியாக பரவும்.


இந்த அழற்சி ஏற்பட்டால், தீவிரமான வயிற்றுப் போக்கு ஏற்படும். அதுமட்டுமின்றி, வயிற்று உப்புசம், குமட்டல், வயிற்று பிடிப்புகள் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுவதோடு, அத்துடன் காய்ச்சல், தலைவலி, குளிச்சியான உடல், உடல் வலி, வறட்சியான சருமம், வாய் வறட்சியடைதல் போன்றவையும் ஏற்படும். இந்த இரைப்பை குடல் அழற்சி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளை இது அதிகம் தாக்கும்.

இரைப்பை குடல் அழற்சியினால் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுவதால், உடலில் இருந்து எலக்ரோலைட்டுகள் (உப்பு மற்றும் கனிமச்சத்துக்கள்) பற்றாக்குறை ஏற்படும். இதனால் உடல் வறட்சியடையும். உடல் வறட்சியடைந்தால், உடலின் சாதாரண இயக்கம் பாதிக்கப்பட்டு, உடல் குணமடைய தாமதமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு சில தீவிரமான பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். ஆகவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இரைப்பைக் குடல் அழற்சியை ஒருசில வீட்டு வைத்தியங்கள் கொண்டே சரிசெய்யலாம். சரி, இப்போது அந்த கை வைத்தியங்களைப் பார்ப்போமா!!!

உப்பில் சோடியம் உள்ளது. இது உடலில் நீர்வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் உப்பு கிருமிகளை எதிர்த்துப் போராடுவதோடு, செரிமான பாதையில் pH அளவையும் சீராக பராமரிக்கும். ஆகவே ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை 1 லிட்டர் நீரில் கலந்து, அதனை நாள் முழுவதும் சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும்.

இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்வதில், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளைக் கொண்ட இஞ்சியும் ஒன்று. இது வயிற்றில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றையும் குறைக்கும்.

எனவே அதற்கு 1 கப் நீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் 1 டீஸ்பூன் இஞ்சியை போட்டு 10-15 நிமிடம் மூடி வைத்து, பின் அதனை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால், சற்று விரைவில் குணமாவதைக் உணரலாம். குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இஞ்சி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பெருங்காயத்திலும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் தன்மை இருப்பதால், இது இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கிய கிருமிகளை அழித்து, விரைவில் நிவாரணம் தரும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, செரிமான பாதையையும் வலுவாக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். மேலும் சமைக்கும் போது உணவில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகரும் மிகவும் சிறப்பான ஒரு நிவாரணப் பொருள். அதற்கு 1 டீஸ்பூன் வடிகட்டாத ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், தினமும் இரண்டு முறை திராட்சை ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்தும் குடிக்கலாம்.

பேக்கிங் சோடா வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்து, வயிற்று எரிச்சலைத் தணிக்கும். மேலும் பேக்கிங் சோடாவானது வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றையும் தடுக்கும். அதற்கு 1 டம்ளர் நீரில், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பேக்கிங் சோடாவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது.

துளசி மிகவும் அற்புதமான ஒரு மூலிகைப் பொருள். அதற்கு துளசிச் சாற்றையும், இஞ்சி சாற்றையும் சரிசம அளவில் கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒரு கப் தண்ணீரில் 10-15 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து சில நாட்கள் குடிக்கலாம் அல்லது துளசி டீ செய்து, அதில் தேன் சேர்த்தும் குடிக்கலாம்.

புதினாவில் ஆன்டி-மைக்ரோபியல் அதிகம் இருப்பதால், இவை வாய்வு தொல்லை, உப்புசம், குமட்டல், வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு 1 கப் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த புதினாவை சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து, பின் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இதனால் வயிறு குளிர்ச்சி அடையும்.

2 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தியை 1 கப் சுடுநீரில் போட்டு மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடித்தால், வயிற்றுப் போக்கு, அடிவயிற்று வலி, உப்புசம், குமட்டல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள அமைலேஸ் என்னும் ஸ்டார்ச் இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்யும். அதிலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் இருப்பதால், இவை செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும். அதிலும் வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து தினமும் 2-3 முறை உட்கொள்வது நல்லது.

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், வயிற்றில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகள் அழிந்து, வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும். மேற்கூறியவைகளை தொடர்ந்து ஒரு வாரம் பின்பற்றியும் எந்த ஒரு மாற்றமும் தெரியாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

Disqus Comments