.

Tuesday, November 10, 2015

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது?



பழங்காலம் முதலாக தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களில் ஒன்று தான் செம்பருத்தி. செம்பருத்தி செடியின் இலை, பூ என்று அனைத்துமே தலையில் உள்ள பிரச்சனைகளைப் போக்கும் குணம் கொண்டது. இதன் அதிக மருத்துவ குணத்தால் ஆயுர்வேதத்தில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.


பலருக்கு செம்பருத்தியை தலைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செம்பருத்தியை தலைமுடிக்கு பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலிமையடையும், நரைமுடி நீங்கும், முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

சில செம்பருத்தி இலைகளை எடுத்து அரைத்து, அதில் தயிர் சிறிது சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை செரும்பருத்தி இலையுடன் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

ஒரு கையளவு செம்பருத்தி இலைகளை அரைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெல்லிப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, அலசலாம். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

செம்பருத்தி இலைகளை, மருதாணி இலையுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கடைகளில் விற்கப்படும் ஷாம்பு கூட தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே தலைக்கு குளிக்கும் போது கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்தாமல், 15 செம்பருத்தி இலைகள் மற்றும் 5 செம்பருத்தி பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் இறக்கி குளிர வைத்து அரைத்து, அதனைக் கொண்டு தலைமுடியை தேய்த்து அலசினால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.

Disqus Comments