.

Saturday, April 11, 2015

நீங்கள் குடிப்பது சுத்தமான குடிநீரா என தெரிந்துகொள்வது எப்படி?



குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?

குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.

8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.’போர்வெல்’ தண்ணீரில் ‘ப்ளூரைடு’ அதிகமாக இருந்தால், தொடர்ந்து குடிக்கும் போது, பற்கள் மஞ்சளாகும். இரும்பு அதிகமாக இருந்தால் ரத்தஓட்டம் பிரச்னையாகும்.’போர்வெல்’ தண்ணீரை ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் சுத்திகரிக்கும் போது, 100 லிட்டர் தண்ணீரில் 30 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும். மீதியுள்ள 70 லிட்டர் தண்ணீர் கூடுதல் உப்புடன் பூமிக்குத் தான் செல்லும். இதனால் அப்பகுதியில் உள்ள தண்ணீரில் உப்பின் தன்மை தொடர்ந்து அதிகரிக்கத் தான் செய்யும்.கடைகளில் கிடைக்கும் ‘மினரல் வாட்டரில்’, தண்ணீரில் கரையும் திடப்பொருட்களின் அளவு வெறும் 26 தான். குறைந்தது 46 ஆக இருந்தால் தான், நல்லது. அதேபோல் பி.எச்., அளவும் ஆறுக்கு கீழே உள்ளது. இதனால் வயிறு, குடல்புண் ஏற்படலாம்.

எந்தத் தண்ணீரைத் தான் நம்பி குடிப்பது?

இயற்கை கொடுத்த மழைநீரை ரோட்டில் வீணாக்கி விட்டு, காசு கொடுத்து கண்ட தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம். மழைநீரை ஐந்து வழிகளில் பிடிக்கலாம். மழை பெய்யும் போது திறந்த வெளியில் குடத்தை வைத்து பிடித்தால் அது சுத்தமான மழைநீர். அதில் கரையக்கூடிய திடப்பொருளின் அளவு 46, பி.எச்., அளவு மிகச்சரியாக 7 ஆக இருக்கும். இதுதான் அமிலம், காரமில்லாத நடுநிலைமை. இதுதான் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் என்று இயற்கை, நமக்கு மழைநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டாவது முறை, மொட்டைமாடியில் வழியில் மழைநீரை குழாய் மூலம் கீழ்நிலைத் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிப்பது. இதில் தொட்டியின் பாதியளவு கூழாங்கற்கள், அடுப்புக்கரி, மணல், தேங்காய் சிரட்டை எரித்த கரியை நிரப்ப வேண்டும். மீதிப்பகுதியில் மழைநீர் சேகரமாகும். சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கீழ்ப்பகுதியில் உள்ள திருகுகுழாய் மூலம் பாத்திரங்களில் சேகரிக்கலாம். ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளில், மிகச் சிக்கனமாக இம்முறையில் மழைநீரை சேகரிக்கலாம்.

அடுத்தது வீட்டின் பிறபகுதிகள், நடைபாதையில் சேகரமாகும் மழைநீரை தக்கவைக்க, மழைநீர் சேகரிப்பு பள்ளத்தை தோண்ட வேண்டும். இதில் பாதியளவு ஜல்லிகற்களை கொட்டி, மேற்பகுதியை மூடி காற்று வெளியேற சிறுகுழாயை செருக வேண்டும். மழைநீர் இப்பள்ளத்தில் நிறைந்து, பூமியை நோக்கிச் செல்லும். மழைநீர் நிலத்தடிக்குள் செல்லாத நிலையில் தான், கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. வீட்டில் விரிசல் இருப்பதற்கு, நிலத்தடி நீர் சேகரிப்பு அவசியம். அதுமட்டுமின்றி, மண் அரிப்பையும் தடுப்பதோடு, ‘போர்வெல்’ நீரின் உப்புத்தன்மையை குறைக்கிறது.

எப்படி பரிசோதிப்பது ?

தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் அளவை, ‘டி.டி.எஸ்.,’ மீட்டர் மூலம், ஒருசில வினாடிகளில் கண்டறியலாம். இந்த கருவியின் விலை ஆயிரம் ரூபாய். ஹட்ரஜன் பொட்டன்ஷியல் கண்டறிய ஒரு ‘லிட்மஸ்’ காகிதம் போதும். குடிநீரை காகிதத்தை நனைத்த 30 வினாடிகளில் மஞ்சள், பச்சை இரண்டு நிறத்திற்கு நடுவில் இருந்தால், அளவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். நூறு காகிதம் அடங்கிய ‘லிட்மஸ்’ புத்தகம் விலை 100 ரூபாய்.

ஒரு வீட்டுக்கு 10 செ.மீ., மழை

நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு குடிக்க, சமைப்பதற்கு 11ஆயிரம் லிட்டர் மழைநீர் தேவை. மதுரையில் சராசரி மழைஅளவு 86 செ.மீ., ஆயிரம் சதுரடி மொட்டைமாடி இருந்தால், மொத்தம் 10 செ.மீ., மழையே போதும். ஒருமுறை மழை பெய்தால் குறைந்தது 10 மி.மீ., என்று வைத்துக் கொண்டாலும் ஆயிரம் லிட்டர் கிடைத்து விடும். இதில் நேரடியாக வெயில் படாமல் இருந்தால் ஆறுமாதங்கள் வரை பாதுகாக்கலாம். அதன்பின்னும் தண்ணீர் இருந்தால், ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் ‘கெமிக்கல் ப்ளீச்’ கலந்தால் போதும். மீண்டும் குடிக்க பயன்படுத்தலாம். 500 சதுர அடி மொட்டை மாடி இருந்தால் 20 செ.மீ., மழை தான் தேவை. ஒவ்வொரு வீட்டிலும் மிக எளிமையாக மழைநீரை சேமிக்கலாம். குடிதண்ணீருக்காக அரசையோ, தனியாரையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை.
Disqus Comments